ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு பணியாற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் அதிகளவான துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. விசேட தூதர் டெபோரா லியோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் உள்ள ஐ.நாவின் உள்நாட்டுப் பணியாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் குறித்து நாங்கள் அதிகளவில் கவலைப்படுகிறோம். எங்கள் ஊழியர்களுக்கு உதவவும் அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இயன்ற அனைத்தையும் நாங்கள் செய்வோம் எனவும் என்று லியோன்ஸ் கூறினார்.
ஐ.நா. பணியாளர்கள் மிரட்டப்பட்டால் அல்லது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சுறுத்தல் இருந்தால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான அத்தியாவசிய, அவசர வேலைத்திட்டங்களை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாது எனவும் என்று லியோன்ஸ் நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிட்டார்.
அனைவரதும் உரிமைகள் மதிக்கப்படும் என தலிபான்கள் சர்வதேசத்துக்கு உறுதியளிக்க முயன்றாலும் ஆங்காங்கு இடம்பெறும் பழிவாங்கும் செயற்பாடுகள் அவர்கள் மீதாக நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
நாடு முழுவதும் ஐ.நா. பணியாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்களால் நாங்கள் விரக்தியடைந்துள்ளோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐ.நா. சிரேஷ்ட இராஜதந்திரி ஜெப்ரி டிலோரெண்டிஸ் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரம் மற்றும் நடுநிலை கொள்கையை மதிக்குமாறு தலிபான்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஐ.நா. பெண் ஊழியர்கள் சிலர் அலுவலகத்தக்கு வருவதற்கு தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுடன் இணைந்து பணியாற்றவும் இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன.
ஐ.நாவின் அணைத்துப் பணியாளர்களும் பாலின மற்றும் ஏனைய வேறுபாடுகளைக் கடந்து சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சிரேஷ்ட இராஜதந்திரி ஜெப்ரி டிலோரெண்டிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.